Cinema History
பத்திரிக்கையில் வந்த போலி செய்தியால் பிரச்சனைக்குள்ளான சிவாஜி படம்.. ஆனாலும் 100 நாள் ஹிட்டு…
தமிழ் சினிமாவில் எப்போதுமே சிறந்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் நடிகராக இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு இணையான ஒரு நடிகர் இல்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இந்தியாவிலேயே சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நடிகராக சிவாஜி கணேசன் இருந்தார்.
200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன். ஆனால் அதில் பத்திரிக்கையில் வந்த செய்தியால் ஒரு திரைப்படமே பிரச்சனைக்குள்ளான சம்பவம் ஒன்று நடந்தது.
1970களில் மாலைக்கண் நோய் என்பது ஒரு குணப்படுத்த முடியாத வியாதியாக இருந்தது. எனவே அதை கதைக்களமாக கொண்டு உருவான திரைப்படம்தான் தங்க புதல்வன். இந்த படத்தின் கதைப்படி சிவாஜி கணேசனின் தந்தைக்கு மாலைக்கண் நோய் இருந்திருக்கும்.
அதே பிரச்சனை சிவாஜி கணேசனுக்கும் வந்துவிடும். இந்த நிலையில் அவர் தன் தாயிடமிருந்து அந்த பிரச்சனையை மறைத்து எப்படி அதை சரி செய்கிறார் என்பதாக கதை செல்லும். இந்த படத்தை இயக்கி முடித்துவிட்டு வெளியிட இருந்த சமயத்தில் ஒரு புதிய பிரச்சனையை படக்குழு சந்தித்தது.
அப்போது மாலைக்கண் நோய் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதில் மாலைக்கண் நோய் ஒரு வியாதியே அல்ல. அதை பச்சிலை சாறு கொண்டே சரி செய்ய முடியும் என கட்டுரை வந்தது. இந்த நிலையில் இதை படித்த தயாரிப்பாளர் இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசனை சந்தித்து சத்தம் போட்டுள்ளார்.
இந்த படம் 100 நாளுக்கு மேல் ஓடும் என இயக்குனர் கூறினார். அதற்கு தயாரிப்பாளர் இந்த படம் 100 நாளுக்கு மேல் ஓடினால் நான் அரை பவுன் மோதிரம் வாங்கி தரேன் என சவால் விட்டார். அதே போல அந்த படமும் 100 நாள் ஓடியது.