அந்த வேலையை மட்டும் எப்போதும் பார்க்காதே.. எம்.ஜி.ஆர் எச்சரித்தும் கேட்காமல் சிக்கலில் சிக்கிய தேங்காய் சீனிவாசன்!.
Actor MGR and Thengaai srinivaasan: தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருந்தவர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிகராக இருந்தப்போதே அவருக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.
மக்களை தவறான வழியில் நடத்தக்கூடாது என்பதற்காக மூடநம்பிக்கைக்கு எதிராக இருந்தார் எம்.ஜி.ஆர். எனவே மூடநம்பிக்கைக்கு ஆதரவான எந்த திரைப்படங்களிலும் அவர் நடிக்கவில்லை. அதே போல மது, புகைப்பிடித்தலுக்கும் எதிராக இருந்தார் எம்.ஜி.ஆர். அவரது திரைப்படத்தில் அப்படியான காட்சிகளை பார்க்க முடியாது.
எம்.ஜி.ஆர் திரைத்துறையிலும் சரி மக்கள் மத்தியிலும் சரி நிறைய நன்மைகளை செய்துள்ளதாக அவரை சுற்றியுள்ள பலருமே கூறியுள்ளனர். அதே போல பலருக்கும் உபதேசங்களையும் வழங்கியுள்ளார். அப்படியாக தேங்காய் சீனிவாசன் தவறான ஒரு முடிவை எடுத்தப்போது அவருக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர்.
தேங்காய் சீனிவாசனுக்கு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. எனவே சிவாஜி கணேசனை வைத்து கிருஷ்ணன் வந்தான் என்னும் திரைப்படத்தை தயாரிப்பதற்கு முடிவு செய்தார் தேங்காய் சீனிவாசன். இந்த விஷயத்தை அவர் எம்.ஜி.ஆரிடம் கூறியப்போது திரைப்படம் தயாரிப்பது கடினமான காரியம் வேண்டாம் என எச்சரித்துள்ளார் எம்.ஜி.ஆர்
ஆனால் எம்.ஜி.ஆர் பேச்சை கேட்காமல் படத்தை துவங்கினார். ஆனால் தேங்காய் சீனிவாசனால் அந்த படத்தை முடிக்க முடியவில்லை. பொருளாதார பிரச்சனை காரணமாக பாதியிலேயே படம் நின்றது. இதனால் வருத்தப்பட்ட தேங்காய் சீனிவாசன் போய் எம்.ஜி.ஆரை சந்தித்து தனது கஷ்டத்தை கூறியுள்ளார்.
நான் தான் முதலிலேயே உன்னை எச்சரித்தேனே நீதான் கேட்கவில்லை என தேங்காய் சீனிவாசனை திட்டிய எம்.ஜி.ஆர் அவரை அனுப்பி வைத்தார். இதனால் வருத்தத்துடன் வீட்டிற்கு வந்தார் தேங்காய் சீனிவாசன். சற்று நேரத்தில் எம்.ஜி.ஆரின் உதவியாளர் வந்து சில லட்சங்களை தேங்காய் சீனிவாசனிடம் எம்.ஜி.ஆர் கொடுக்க சொன்னதாக கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.