Latest News
ஒரே ஒரு பாட்டுதான்.. மொத்த படமும் காலி! – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வேதனை!
தமிழில் அரிதாகவே பெண் இயக்குனர்கள் படம் இயக்கி வரும் நிலையில் அவர்களில் ஒருவராக நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் உள்ளார். தமிழ் சினிமாவில் 3, வை ராஜா வை, லால் சலாம் உள்ளிட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார்.
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் வழக்கமான ரஜினிகாந்த் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இல்லாமல் பல ஊர்களில் தியேட்டர்களில் குறைந்த பார்வையாளர்களே வந்துள்ளனர். விஷ்ணு விஷால், விக்ராந்த் தான் கதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள் என்பதால் பெரும்பாலும் படத்திற்கு வரவேற்பு இல்லை என சொல்லப்படுகிறது.
ஆனால் திரைக்கதையாகவே படம் தொய்வாக உள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 2012ல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக அறிமுகமான ‘3’ திரைப்படமே பெரும் வெற்றி பெறவில்லை. அதை தொடர்ந்து வந்த ‘வை ராஜா வை’, ‘லால் சலாம்’ படங்களும் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. இந்நிலையில் 3 படத்தின் தோல்விக்கு அதில் அமைந்த ஒரு பாடலே காரணம் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சமீபத்தில் இதுகுறித்து பேசிய அவர் “வொய் திஸ் கொலவெறி டி? பாடல் அவ்வளவு பெரிய ஹிட் ஆனது எங்களுக்கே ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் அந்த பாடல் படத்தின் மீதான அதீதமான அழுத்தத்தை கொடுத்தது. அது படத்தின் வெற்றிக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. மாறாக படத்தின் போக்கையே மாற்றிவிட்டது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று வரையிலும் அனிருத், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலருக்கும் சினிமாவில் நல்ல அறிமுகத்தை கொடுத்ததாக வொய் திஸ் கொலவெறி பாடலே உள்ளது. அந்த பாடலால்தான் 3 படம் பிரபலமடைந்தது. அந்த பாடலையே இவர் குறை சொல்கிறாரே! தனுஷ் எழுதிய பாடல் என்பதால் படத்தின் தோல்விக்கு அந்த பாடல்தான் காரணம் என சொல்கிறாரா? என பேச்சுக்கள் எழுந்துள்ளது.