Tamil Cinema News
வசனங்களிலேயே அரசியல் பேசிய ரஜினி.. இந்த படங்களில் பார்த்து இருக்கீங்களா?
சினிமாவிற்கு வந்த ஆரம்ப கட்டம் முதலே அரசியல் மீது ஆர்வம் கொண்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் அரசியலில் இருந்து விலகி விட்டார். ஆனால் சினிமாவில் இருந்த காலக்கட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து அரசியல் குறித்து ரஜினி நிறைய பேசியிருக்கிறார்.
அவரது பாடல்களில் என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா என்ற பாடல் வரிகளை வைத்திருப்பார். அதே போல முத்து திரைப்படத்தில் நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துடுவேன் என ரஜினி கூறும் வசனம் அதிக ட்ரெண்ட் ஆனது.
அந்த சமயங்களில் ரஜினி ரசிகர்கள் பலரும் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வர போகிறார் என்றே முடிவு செய்திருந்தனர். அதற்காக வா தலைவா என்ற ஸ்லோகத்தோடு கூடிய சுவரொட்டிகளை ஒட்டி வந்தனர் ரசிகர்கள். ஆனால் அப்போதும் ரஜினி அரசியலுக்கு வரவில்லை.
அண்ணாமலை திரைப்படத்தில் கூட பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழி இருக்கு. மக்களுக்கு சேவை செய்யும் இந்த அரசியலை அதற்கு பயன்படுத்தாதீர்கள் என ரஜினி வினுசக்ரவர்த்தியிடம் கூறுவதாக ஒரு வசனம் வரும்.
இன்னும் நேரடியாக குரு சிஸ்யன் திரைப்படத்தில் அரசியல் சார்ந்து நிறைய பேசியிருந்தார் ரஜினி. அதன் முதல் பாடலான நாற்காலிக்கு சண்டை போடும் நாடு நம் நாடு என்கிற பாடல் அரசியலை பரிகாசம் செய்யும் விதத்தில் அமைந்திருந்தது.
அதற்கு பிறகும் கூட பா. ரஞ்சித் திரைப்படங்களில் தொடர்ந்து அரசியல் விஷயங்களை பேசியிருந்தார் ரஜினி. கபாலி திரைப்படத்தில் ஏழை எளிய மக்கள் கோர்ட் போடுவது, கால் மீது கால் போட்டு உட்கார்வது எல்லாம் ஆதிக்க இனத்திற்கு எவ்வளவு பிரச்சனையாக இருக்கிறது என்பதை நேரடியாக பேசியிருப்பார்.
காலா திரைப்படத்திலும் அதே போல பாமர மக்களுக்கு ஆதரவான கருத்துக்கள் நிறைய இருக்கும். சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் கூட ஏன் பணக்காரர்கள் என்றும் என்கவுண்டர் செய்யப்படுவதில்லை. சேரி மக்களை மட்டும் மோசமாக பார்க்கிறோம் என்கிற கேள்வியை ரஜினி எழுப்பியிருப்பார்.
இப்படியாக அரசியலுக்கு வரவில்லை என்றாலும் கூட தொடர்ந்து தனது திரைப்படங்களின் வழியாக அரசியல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளார் ரஜினி.
