அறிமுக இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் ஆரம்பத்துலேயே பெரும் பட்ஜெட்டில் திரைப்படம் இயக்குவதற்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதற்கு அவர்கள் வெகுவாக போராடியாக வேண்டும். விஜய் மகன் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே உடனேயே பெரும் நிறுவனத்திடம் வாய்ப்புகள் கிடைக்கின்றன.
அப்படி தமிழில் நல்ல கதைகளை கையில் வைத்திருக்கும் அறிமுக இயக்குனர்களுக்கு உதவுபவராக தயாரிப்பாளர் சிவி குமார் இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் நல்ல கதை களத்தோடு ஒரு திரைப்பட கதையை வைத்திருந்தால் அந்த இயக்குனர்களுக்கு இவர் வாய்ப்பு கொடுப்பார்.
இதனாலேயே ஒரு சமயத்திற்கு பிறகு சிவி குமார் தயாரித்த திரைப்படம் என்றாலே அது நன்றாகதான் இருக்கும் என்கிற மனநிலைக்கு வந்தனர் ரசிகர்கள். இந்த நிலையில் ஆரம்பத்தில் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்தது குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் சிவி குமார்.

அதில் அவர் கூறும்போது முண்டாசு பட்டி, பிசா 2, தெகிடி மாதிரி மொத்தம் அப்போது 5 படங்களை நான் தயாரித்திருந்தேன். ஒவ்வொரு படமும் சராசரியாக 1.50 முதல் 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். அந்த அனைத்து திரைப்படங்களையும் சேட்டிலைட் உரிமத்தை நல்ல விலை கொடுத்து வாங்கியது விஜய் டிவி.
கிட்டத்தட்ட படத்தின் தயாரிப்பு செலவில் முக்கால்வாசி பணம் சேட்டிலைட் விற்பனையிலேயே வந்துவிட்டது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அது என்கிறார் சிவி குமார்.