போலீஸே இவ்வளவு கொடுமை அனுபவிக்கிறாங்களா? – டாணாக்காரன் விமர்சனம்!

விக்ரம் பிரபு நடித்து ஓடிடியில் வெளியாகியுள்ள டாணாக்காரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Social Media Bar

விக்ரம் பிரபு நடித்து தமிழ் இயக்கி வெளியாகியுள்ள படம் டாணாக்காரன். இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. விக்ரம் பிரபுவின் முந்தைய படங்கள் அவ்வளவு நல்ல வரவேற்பை பெறாத நிலையில் இந்த படம் சிறப்பான விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.

1990களிம் நடக்கும் கதை. காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் பயிற்சியில் உள்ளவர்கள் மீது ஏவப்படும் அதிகாரம், சுரண்டல், சாதிய பாகுப்பாட்டை மையப்படுத்திய கதைகளம். ராமநாதபுரத்தை சேர்ந்த அறிவழகன் (விக்ரம் பிரபு) காவலராகும் கனவுடன் பயிற்சி படையில் சேர்கிறான். அதே பயிற்சி பள்ளியில் 1984ல் காவலர் பணிக்கு தேர்வாகியும் பல்வேறு அரசியல் குழப்பங்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் போன 300க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சிக்கு வருகிறார்கள்.

அங்கு பயிற்சி அளிக்கும் காவலர்களில் அதிகார செருக்கு மிக்கவராக இருப்பவர் ஈஸ்வர மூர்த்தி (லால்). இது போதாதென்று லஞ்சம், சாதிய பாகுபாடு, பல்வேறு வகை டார்ச்சர்கள். இதையெல்லாம் பயிற்சி காவலர்கள் பொறுத்துக் கொண்டும், போராடியும் கடந்து வருவதுதான் கதை. எம்.எஸ்.பாஸ்கர், லால் தங்களுக்கான கதாப்பாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்துள்ளனர்.

விக்ரம் பிரபு முந்தைய படங்களை விட இதில் நடிப்பில் சிறிது வித்தியாசம் காட்டியுள்ளது அவரது முன்னேற்றத்தை காட்டுகிறது. விருவிருப்பாக அரசியல் பேசும் கதையில் தேவையில்லாமல் சில காதல் காட்சிகளும், பாடல்களும் வருவது பொறுமையை சோதிப்பதாக உள்ளது. அறிவழகன், ஈஸ்வர மூர்த்தி இடையே நடக்கும் பரேட் மோதல்கள் விருவிருப்பின் உச்சம். விக்ரம் பிரபுவுக்கு நெடுநாட்கள் கழித்து சிறப்பான படமாக அமைந்துள்ளது டாணாக்காரன்.