Entertainment News
சூதாட்ட செயலி மோசடி; அஜித் பட நடிகைக்கு சம்மன்!
அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சூதாட்ட செயலி இந்தியாவில் பணமோசடி செய்ததாக எழுந்துள்ள புகாரில் பல நடிகர், நடிகைகள் சிக்கியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு மகாதேவ் ஆன்லைன் விளையாட்டு செயலி என்ற பெயரில் ஒரு அப்ளிகேஷன் செயல்பட்டு வந்துள்ளது, இந்த சூதாட்ட செயலி மூலமாக பண மோசடி நடைபெறுவதாக சமீபத்தில் புகார் எழுந்தது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு ஹவாலா பணத்தை கைமாற்ற இந்த செயலி பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை அந்த நிறுவனம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியது.
அதில் அங்கிருந்து முறையான ஆவணங்கள் இல்லாத ரூ.417 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சூதாட்ட நிறுவன செயலியை விளம்பரப்படுத்த பணம் பெற்ற விவகாரத்தில் இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இந்தி நடிகைகள் ஹூமா குரேஷி, ஹினா கான், ஷ்ரதா கபூர் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்தி நடிகையான ஹூமா குரேஷி தமிழில் ரஜினிகாந்துடன் காலா, அஜித்குமாருடன் வலிமை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.