Special Articles
அர்ச்சனா கல்பாத்தி சொன்னது கரெக்ட்னா இந்த படங்கள் ஏன் ஓடலை? ஒரு விரிவான பார்வை
சமீபத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் குறித்து பேசிய விஷயம் அதிக சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள்தான் சின்ன பட்ஜெட் படங்களை விட அதிக பாதுகாப்பானவை. ஏனெனில் அவை வெளியாவதற்கு முன்பே நல்ல தொகைக்கு விற்பனை ஆகிவிடுகின்றன என்பது அர்ச்சனா கல்பாத்தியின் வாதமாக இருக்கிறது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இங்கு குறைந்த பட்ஜெட் அதிக பட்ஜெட் என்று இரண்டு வகையான திரைப்படங்கள் வருகின்றன.
ஆனால் இருக்கும் முக்கால்வாசி தயாரிப்பு நிறுவனங்களால் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை இயக்க முடிவதில்லை. அவர்களிடம் அந்த அளவிற்கு பணம் இருப்பதில்லை. எனவே அவர்கள் குறைந்த பட்ஜெட்டில்தான் திரைப்படங்களை இயக்குகின்றனர்.
குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்கள்:
பெரும்பாலும் முதல் படம் எடுக்கும் இயக்குனர்கள் குறைந்த பட்ஜெட் படங்கள் மூலமாகதான் அறிமுகமாகிறார்கள். அவர்களை வளர்த்துவிடும் நிலையில் இந்த சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களே இருக்கின்றனர். இப்போது பிரபல இயக்குனர்களாக இருக்கும் நலன் குமாரசாமி, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் என பல இயக்குனர்களை இவர்கள்தான் வளர்த்து விட்டனர்.
அந்த வகையில் இப்போது பெரும் தயாரிப்பாளர்கள் கோடிகளில் சம்பாதிப்பதற்கு காரணமாக இருப்பதே இந்த சின்ன திரைப்படங்களை தயாரிப்பதுதான். அர்ச்சனா கல்பாத்தியின் மனநிலையில் இந்த தயாரிப்பாளர்களும் சின்ன பட்ஜெட் படம் ரிஸ்க் என நினைத்திருந்தால் இந்த இயக்குனர்கள் எல்லாம் வந்திருக்கவே முடியாது.
நிஜமாவே அதிக பட்ஜெட் படங்கள்தானா?:
பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் நிஜமாகவே பெரிய பட்ஜெட் படங்கள்தானா என்கிற கேள்வி ஒரு பக்கம் வருகிறது. இயக்குனர் ஷங்கர், ராஜமௌலி மாதிரியான இயக்குனர்கள் படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள்தான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
ஆனால் ஒரு படத்தின் பட்ஜெட் 150 கோடி என வைத்துக்கொள்வோம். படத்தில் கதாநாயகன் சம்பளம் 100 கோடி, மற்ற நடிகர்களுக்கு 25 கோடி அது போக படத்தின் தயாரிப்பு செலவு 25 கோடிதான் ஆகிறது. அப்படியிருக்கும்போது அது எப்படி பெரிய பட்ஜெட் படமாகும்.
படத்தின் தயாரிப்பு செலவை கணக்கு வைத்துதான் அது பெரிய பட்ஜெட் படமா என்பதை முடிவு செய்ய முடியும். வெறும் 25 கோடிக்கு எடுக்கப்படும் படத்தை பெரிய பட்ஜெட் படம் என பல தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
பெரிய பட்ஜெட் படத்தில்தான் ரிஸ்க்:
அர்ச்சனா கல்பாத்தி கூறியது போலவே பெரிய பட்ஜெட் படம்தான் உண்மையில் ரிஸ்க் இல்லாதது என்பதே தமிழ் சினிமாவில் சரியான கருத்தாக தெரியவில்லை.
அவரது கூற்றுபடி விஜய் அஜித் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து எடுக்கும் திரைப்படங்களுக்கு மார்க்கெட் அதிகமாக இருப்பதால் வெளியாவதற்கு முன்பே ஓ.டி.டி சாட்டிலைட் ரைட்ஸ் போன்றவை மூலம் நல்ல வியாபாரம் ஆகிவிடுகிறது.
அதனால் திரையில் படம் வசூல் செய்வதற்கு முன்பே பணம் கிடைத்துவிடுகிறது. ஆனால் சின்ன பட்ஜெட் படங்கள் திரையரங்கில் ஓடிவிட்டால் பரவாயில்லை. இல்லை என்றால் பணம் கிடைப்பது அரிதுதான் என கூறியுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.
இவரின் கூற்றுபடி பெரும் நடிகர்கள் நடித்தால் திரையில் வெளியாவதற்கு முன்பே படம் நல்ல வியாபாரமாகும் என்றால் ஏன் இந்தியன் 2 திரைப்படம் அப்படியான வியாபாரத்தை பெறவில்லை?
அதே போல லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த லால் சலாம் திரைப்படமும் பெரிய வரவேற்பை பெறவில்லை. இன்னமும் எந்த ஓ.டி.டியில் வெளியாகவும் இல்லை. அர்ச்சனா கல்பாத்தி கூறியப்படி பார்த்தால் ரஜினிகாந்தின் படம் என்பதால் ஓ.டி.டியில் வியாபாரம் ஆகியிருக்க வேண்டுமே என்கிற கேள்வி வருகிறது.
மேலும் படம் வெளியாவதற்கு முன்பே இந்த வியாபாரம் என்றால் பிறகு எதற்கு நாம் திரையரங்கிற்கு வேறு சென்று பார்க்க வேண்டும் என்கிற மனபோக்கை இது மக்களுக்கு ஏற்படுத்தலாம்.
ஏ.ஜி.எஸ் தயாரித்த லவ் டுடே அபத்தமான கருத்துக்களை கொண்டிருந்தாலும் தமிழில் குடும்பஸ்தன், லப்பர் பந்து, பார்க்கிங் மாதிரியான நல்ல கதை களங்களை கொண்ட படங்களும் வருகின்றன. அதையும் கணக்கில் எடுத்து பார்க்கும்போது இங்கு இப்போது குறைந்த பட்ஜெட் படங்களின் தேவையே அதிகமாக இருக்கிறது.
Author By
RK Rajkumar
