Movie Reviews
‘சத்தமின்றி முத்தம் தா’ திரை விமர்சனம் – சத்தமில்லாமல் ஓடிருங்க பாஸ்!
ஸ்ரீகாந்த் மற்றும் புதுமுக நாயகி பிரியங்கா திம்மேஷ் நடிக்க, ராஜ் தேவ் இயக்கத்தில் தயாரான ‘சத்தமின்றி முத்தம் தா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை சஸ்பென்ஸ் திரில்லராய் கொடுக்க நினைத்து சற்று சொதப்பியது போல தெரியவருகிறது.
ஒரு விபத்தில் தனது நினைவுகளை சந்தியா கதாபாத்திரத்தில் வரும் பிரியங்கா இழக்க, அவளை அன்பாக கவனித்துக் கொள்ளும் கணவராக ஸ்ரீகாந்த் காட்சியளிக்கிறார். இது ஒருபுறம் இருக்க, நான் தான் அவளது கணவன் என இன்னொரு இளைஞன் போலீஸில் புகார் தருகிறான்.
இதில் விசாரணை தொடங்க விக்னேஷ் போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளி என தெரியவருகிறது. இது பார்பவர்களை மட்டும் குழப்பாமல், சந்தியாவையும் சேர்த்து போட்டு குழப்புகிறது. உண்மையான கணவன் யார்? சந்தியா வாழ்கையில் என்ன நடந்தது? போன்ற கேள்விகளுக்கு இப்படம் பதிலளிக்கிறது.

பணத்துக்காக கொலை செய்வதுதான் முழு நேரத் தொழில் என்றாலும், நல்லவர்கள் மீது கனிவு காட்டும் விதத்தில் அமைந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த். தான் யார், தனக்கு என்ன நடந்தது, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என எதுவும் தெரியாமல், உண்மையிலேயே தன் கணவன் யார் என புரியாமல் தவிப்பவராக பிரியங்கா திம்மேஷ் என அற்புதமான கதையம்சமாக இருந்தாலும், அதை வெளிப்படுத்திய விதம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
இருந்தும் காட்சிகளின் விறுவிறுப்பை உணர்ந்து பின்னணி இசை தந்திருக்கும் ஜுபின், எளிமையான கதைக்களத்தின் நீள அகலங்களை குறையின்றி தன் கேமராவில் சுருட்டியிருக்கும் யுவராஜ் படத்திற்கு சிறப்பு.
சஸ்பென்ஸ் திரில்லருக்கேற்ற நல்லதொரு கதை, ஆனால் கொஞ்சம் ரியாலிட்டியை கடந்து செல்வதால், ‘சத்தமின்றி முத்தம் தா’ சத்தமே இல்லாமல் வெளியேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
