1 லட்சம் தந்தால்தான் நடிப்பேன் – அப்போதே எம்.ஜி.ஆரை விட அதிகமாக சம்பளம் கேட்ட சந்திரபாபு

தமிழ் சினிமாவில் சந்திரபாபு ஒரு ஈடு இணையற்ற நகைச்சுவை கலைஞர் ஆவார். தமிழ் சினிமா வரலாற்றை ஒருவர் எழுத வேண்டும் எனில் சந்திரபாபுவின் பெயர் இல்லாமல் அதை நிறைவு செய்ய முடியாது.

Social Media Bar

சந்திரபாபு பல கலைகளிலும் சிறந்து விளங்கினார். படம் இயக்குவது, நடிப்பது என பல திறமைகளை அவர் கொண்டிருந்தார். 1959 ஆம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான திரைப்படம் சகோதரி.

இந்த படத்தை இயக்கி முடித்த பின்பு அதை பார்த்த ஏ.வி.எம் செட்டியாருக்கு அந்த படம் திருப்தியாக இல்லை. எனவே அவர் சந்திரபாபுவை அழைத்து “உனக்கு தகுந்தாற்போல சில காட்சிகளை இயக்கி, பாடல்கள் மற்றும் நகைச்சுவைகளை சேர்த்து படத்தை சுவாரஸ்யமாக மாற்றி தா” என கேட்டுள்ளார்.

அந்த படத்தை பார்த்த சந்திரபாபு படத்தை ”7 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்து தருகிறேன். ஆனால் எனக்கு 1 லட்ச ரூபாய் சம்பளமாக வேண்டும்” என்றார்.

அப்போது எம்.ஜி.ஆர் மாதிரியான பெரிய நடிகர்களே 50,000 அல்லது 60,000 அளவில்தான் சம்பளம் வாங்கி வந்தனர். இதனால் ஏ.வி.எம் செட்டியாருக்கு இது அதிக தொகையாக தோன்றியுள்ளது. எனவே தொகையை குறைத்துக்கொள்ளுமாறு சந்திரபாபுவிடம் கேட்டுள்ளார்.

படத்தின் பாடல்கள், நடிப்பு, இயக்கம் என அனைத்தையும் செய்வதால் அந்த தொகை சரியானதுதான் என சந்திரபாபு கூற, ஏ.வி.எம் செட்டியாரும் அந்த தொகையை தர ஒப்புக்கொண்டார்.

சந்திரபாபு மெருகேற்றிய பிறகு அந்த படம் உண்மையிலேயே ஏ.வி.எம் செட்டியாருக்கு திருப்தியாக இருந்தது. சகோதரி படமும் ஒரு வெற்றி படமாக அமைந்தது.

இதனால் தமிழ் சினிமாவிலேயே முதன் முதலாக 1 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகராக சந்திரபாபு உள்ளார். மேலும் 7 நாட்கள் பணிபுரிவதற்கு 1 லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நட்சத்திரமும் சந்திரபாபுதான்.