மணிகண்டன், கௌரி பிரியா ஆகியோரின் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் “லவ்வர்”. இத்திரைப்படத்தை பிரபுராம் வியாஸ் இயக்க, சான் ரோல்டன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்தபோதே இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்தது. மணிகண்டன் தற்போது தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க கதாநாயகனாக வளர்ந்துள்ளார். அவர் இதற்கு முன்பு நடித்த “குட் நைட்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

“குட் நைட்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரது “லவ்வர்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் தற்போது வெளிவந்துள்ளது. ஆனால் “குட் நைட்” திரைப்படம் போல் அல்லாமல் இத்திரைப்படத்திற்கு சற்று கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.
திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுக்கு இத்திரைப்படம் திருப்தியளிக்கவில்லை என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான புளு சட்டை மாறன் தன்னுடைய தனித்துவமான ஸ்டைலில் இத்திரைப்படத்தை தனது யூட்யூப் வீடியோவில் விமர்சித்துள்ளார்.
“திரைப்படத்தின் முதல் பாதியை ஓஹோ என்று புகழ முடியாது என்றாலும் ஓரளவுக்கு தலைவலி இல்லாமல் நன்றாக சென்றது. ஆனால் இரண்டாம் பாதி முழுவதும் ஹீரோ ஹீரோயினிடம் ‘உன்னை காதலிக்க எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு’ என அதையே கேட்டுக்கொண்டே இருக்கிறார். இரண்டாம் பாதி முழுவதுமே திரும்ப திரும்ப பேசி எரிச்சலூட்டிக்கொண்டே இருக்கிறார். அந்த ஹீரோயின் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்தாலும் அதனை இவரே கெடுத்துவிடுகிறார்” என்று கூறிய அவர்,

“திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியையும் மிக நீளமாக எடுத்து வைத்திருக்கிறார்கள். பத்து வினாடியில் முடிக்க வேண்டிய காட்சியை 15 வினாடிகள் எடுத்து வைத்திருக்கிறார்கள். பற்றாக்குறைக்கு பாகவதர் படங்களை போல் வலுக்கட்டாயமாக பாடல்களை இறக்கிவைத்துவிட்டார்கள்” எனவும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “மொத்தத்தில் இத்திரைப்படம் எப்படி இருக்கிறது என்றால், இந்த படத்தில் தேவையில்லாத காட்சிகளை எல்லாம் மிகவும் நீளமாக எடுத்து வைத்திருக்கிறார்கள். தேவையான காட்சிகளுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள். படத்தில் காமெடி மிஸ்ஸிங், ரசிக்கும்படியான பாடல்கள் மிஸ்ஸிங், இது எல்லாம் இருந்திருந்தால் இந்த படம் ரொம்ப நல்ல படமாக வந்திருக்க வேண்டியது. சொல்ல வந்த விஷயத்தை அளவுக்கதிகமா சொல்லி சுமாரான படமாக எடுத்து வைத்திருக்கிறார்கள்” எனவும் அவர் விமர்சித்துள்ளார்.






