Cinema History
ஒரு சாதரண நடிகனுக்கு இவ்வளவு சம்பளமா? – ரஜினி, கமலை அதிர வைத்த ராமராஜன்!
சினிமாவில் பெரும் நடிகர்கள் இருக்கும் சம காலத்தில் முதன் முதலாக யார் அதிக சம்பளம் வாங்கியது என்கிற விஷயம் மட்டும் பலரையும் ஆச்சரியப்படுத்தும் விஷயமாகவே இருக்கும். எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்தில் துவங்கி கமல்,ரஜினி காலக்கட்டம் வரை இந்த சம்பவங்கள் நடந்துக்கொண்டே இருந்துள்ளன.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் பெரும் நடிகர்களாக ஆன பின்னும் கூட 60,000, 65,000 என்ற அளவில்தான் சம்பளம் வாங்கி வந்தனர். ஆனால் 1953 இல் வெளிவந்த ஒளவையார் திரைப்படத்தில் நடிப்பதற்கு கே.பி சுந்தரம்பாளுக்கு ரூபாய் 1 லட்சம் சம்பளமாக தரப்பட்டது.
அதே போல ரஜினி, கமல் காலக்கட்டத்தில் அவர்களுக்கே அதிர்ச்சியை கொடுத்தவர் ராமராஜன். தொடர்ந்து பாமர மக்களில் ஒருவனாகவும், பாமர மக்களுக்காக போராடும் நாயகனாகவும் நடித்ததால் ராமராஜனின் அனைத்து படங்களும் ஹிட் அடித்தன.
மக்களும் தங்களில் ஒருவராக ராமராஜனை கருதினர். இதனால் ராமராஜனின் சம்பளமும் அதிகரித்துக்கொண்டே வந்தது. 1989 இல் ராமராஜன் நடித்த என்ன பெத்த ராசா என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் சிராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ரூபாய் 1 கோடியை சம்பளமாக வாங்கினார் ராமராஜன்.
அந்த காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவிலேயே யாரும் 1 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கவில்லை. இதனால் தமிழில் துவங்கி தென்னிந்திய சினிமா முழுவதுமே ராமராஜனை வியப்புடன் பார்த்தது. அவரது காலக்கட்டத்தில் அப்படியொரு கதாநாயகனாக ராமராஜன் இருந்துள்ளார்.