முதல் பாதி மோசம்!.. சலார் படக்கதை என்ன!.. சுருக்கமான விமர்சனம்…

Salaar Movie Review : கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வரும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று அவர் இயக்கத்தில் அடுத்து வெளியாகியிருக்கும் திரைப்படம் சலார்.

நடிகர் பிரபாஸ் மற்றும் ப்ரீத்திவிராஜ் இருவரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படக்கதைப்படி கன்சார் என்னும் இந்தியாவில் இருக்கும் ஒரு பகுதி தொடர்ந்து பழங்குடி இன மக்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வருகிறது.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப்போது கன்சார் பகுதியில் மட்டும் அரசு குறித்த எந்த ஒரு சலுகையும் வேண்டாம். கன்சார் இந்தியாவில் இருந்து தனித்து இருக்கும் என கூறுகின்றனர் பழங்குடியினர். அதன்படி கன்சாருக்கு என தனி சட்டம், தனி ராணுவம் என தனி அரசாட்சி நடத்தி வருகிறது கன்சார்.

Social Media Bar

அப்படிப்பட்ட கன்சாரின் அரச வாரிசாக இருப்பவர்தான் வரதராஜ மன்னார். வரதராஜ மன்னாருக்கு ஒரு உயிர் தோழன் இருக்கிறான் அவன் தான் தேவா. தேவா ஒரு கட்டத்தில் கன்சாரை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வருகிறது. ஆனால் தனது நண்பன் அழைக்கும்போது திரும்ப வருவதாக வாக்கு தருகிறான் தேவா.

இந்த நிலையில் ஒரு நாள் நண்பனிடமிருந்து அழைப்பு வந்த நிலையில் கன்சார் செல்லும் தேவாவிற்கு அதிர்ச்சி காத்துள்ளது. கன்சாரே ரத்த வெள்ளத்தில் மிதக்கிறது. கன்சாரின் அரசாட்சிக்கு பெரும் அச்சுறுத்தல் வந்திருப்பதை அறிந்த தேவா தனது நண்பனுக்கு உதவி கன்சாரை மீட்டெடுப்பதை கதையாக கொண்டுள்ளது திரைப்படம்.

விமர்சனம்:

திரைப்படத்தை பொறுத்தவரை கே.ஜி.எஃப் திரைப்படத்தை விடவும் இதில் கதாபாத்திரங்கள் அதிகமாக இருக்கின்றன. முதல் பாதியில் பிரபாஸின் கதாபாத்திரமான தேவா கதாபாத்திரமே அதிகமாக வருகிறது. தேவாவிற்கு கெத்து காட்ட வேண்டும் என்று முதல் பாதியை சொதப்பி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.

பலருக்கும் முதல் பாதி கொஞ்சம் தொய்வாக தெரிந்தாலும் அடுத்த பாதியில் கதை மிகவும் சுறு சுறுப்பாக செல்கிறது. படம் போகும் வேகத்திற்கு நம்மால் ஈடு கொடுக்க முடியவில்லை என்றே கூற வேண்டும். இயக்குனர் பிரசாந்த் நீலை பொறுத்தவரை அவருடைய திரைப்படங்கள் பொதுவாகவே சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படமாகதான் இருக்கின்றன.

ஆனால் கதையை சொல்லும் விதத்திலும், உறவுகளுக்கான முக்கியத்துவத்தை காட்டுவதிலும்தான் அவருடைய திரைப்படம் வெகுவாக ரசிக்கப்படுகிறது. கே.ஜி.எஃப் படத்திலேயே தனது அம்மாவுக்காகதான் அவன் ராஜ்ஜியத்தையே உருவாக்கியிருக்கிறான் என கூறுவதாகட்டும், அவன் கற்பனை கதைகளை நிஜமாக்க வந்தவன் போன்ற வரிகள் எல்லாம் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளன.

அதே போல இந்த படத்திலேயும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. எப்படியும் கே.ஜி.எஃப் பிடித்தவர்களுக்கு இந்த திரைப்படம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் உலக சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்குமா என்பது கேள்விக்குறியே!..