Cinema History
ஒரு நாய்க்கு கொடுக்கும் மரியாதை எனக்கு கொடுக்கலையே சார்!.. தயாரிப்பு நிறுவனத்தால் அவமானப்பட்ட ரஜினிகாந்த்!.
Rajinikanth: ஆரம்பத்தில் சினிமாவிற்கு நடிகர்கள் நடிக்க வந்த பொழுது அவர்களுக்கு நிறம் என்பது மிகப்பெரிய தடையாக இருந்தது. கருப்பாக இருக்கும் நடிகர்களுக்கு அதிகமாக முக்கியத்துவமும் வரவேற்பும் இல்லாமல் இருந்தது.
ஆனால் அதனை உடைத்து கருப்பாக இருக்கும் நடிகராலும் பெரும் உயரத்தை தொட முடியும் என அப்பொழுதே காட்டியவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்த பொழுதும் அவருக்கும் கிட்டத்தட்ட இதே மாதிரியான பிரச்சனைகள் இருந்தன.
அதில் ஒரு விஷயத்தை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். மூன்று முடிச்சு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு விலை உயர்ந்த நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்தார் ரஜினிகாந்த். பொதுவாக இரவு நேரங்களில் சாப்பிட்டு முடித்த பிறகு தன்னுடைய நாயை அழைத்துக் கொண்டு சாலையில் நடப்பது ரஜினிக்கு பழக்கமான விஷயமாக இருந்தது.
ரஜினிக்கு நடந்த சம்பவம்:
அப்படியே அன்றும் ஒரு நாள் கைலி கட்டிக் கொண்டு ஒரு துண்டை தோளில் போட்டுக் கொண்டு நாயை வாக்கிங் அழைத்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மூன்று முடிச்சு திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருந்த அமுதம் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் வழியாகதான் ரஜினிகாந்த் சென்றார்.
சரி அந்த அலுவலகத்தில் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் பேசிவிட்டு செல்லலாம் என்று அலுவலகத்திற்கு சென்றவர் நேரே அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்து விட்டார். அப்பொழுது அங்கிருந்து வந்த நபரிடம் சிகரெட் பற்றவைப்பதற்காக வத்தி பெட்டி இருக்கா என்று கேட்டிருக்கிறார் ரஜினி.
ஆனால் ரஜினியின் தோற்றத்தை பார்த்ததும் ஏதோ ஒரு ஏழைதான் வந்து அங்கு அமர்ந்திருப்பதாக அங்கிருந்த அந்த புதிய நபர் நினைத்து விட்டார். எனவே யாரப்பா நீ புதிதாக இருக்கிறாய் யாரையும் கேட்காமல் உள்ளே வந்து அமர்ந்து இருக்கிறாய் வெளியே போ என்று கூறிவிட்டார்.
நாய்க்கு கிடைத்த மரியாதை:
உடனே ரஜினிகாந்த் உங்கள் முதலாளி வெங்கட்ராமன் இல்லையா, அவரது திரைப்படத்தில் தான் நான் நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார் அவர்கள் எல்லாம் யாரும் இல்லை. நான் அவர்களின் சொந்தக்காரன் உன்னை யாருன்னு எனக்கு தெரியாது உடனே போ என்று கூறி இருக்கிறார்.
இந்த நேரத்தில் அந்த நாய்க்குட்டி வேகமாக அந்த அறைக்குள் ஓடி வரவே இது யாருடைய நாய் என்று கேட்டிருக்கிறார் அந்த புதிய நபர். உடனே ரஜினிகாந்த் அது என்னுடைய நாய்க்குட்டி தான் என்று கூறவும் இவ்வளவு விலை உயர்ந்த நாய்க்குட்டியை வளர்க்கிறார் என்றால் இவர் பெரிய ஆளாகத்தான் இருப்பார் என்று நினைத்து வத்தி பெட்டியை கொண்டு வந்து கொடுத்து மரியாதை உடன் பேசி இருக்கிறார் அந்த நபர். ஒரு உயர்சாதி நாய்க்குட்டிக்கு இருக்கும் மரியாதை மனிதனுக்கு இல்லையே என்று அப்போது நினைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.