Actor Vadivelu: தமிழ் சினிமாவில் வடிவேலு நடித்த பல காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமானவை ஆகும். அந்த வகையில் மிகவும் பிரபலமான காமெடியாக மாயி திரைப்படத்தில் வரும் காமெடி இருக்கும். மாயி திரைப்படத்தில் வாம்மா மின்னலு என்னும் அந்த நகைச்சுவையை பலரும் பார்த்திருப்போம்.
அதில் அந்த மின்னலாக நடித்தவர்தான் நடிகை தீபா. பொதுவாக வடிவேலு அவர் நடிக்கும் திரைப்படங்களில் யார் அவருடன் நகைச்சுவையாளராக நடிக்க வேண்டும் என முடிவு செய்வார். அந்த வகையில் நடிகை தீபாவையும் அவரே தேர்வு செய்தார்.

அந்த காட்சி படமாக்கப்படும்போது அது இன்னமும் நகைச்சுவையாக இருக்க வேண்டும் என நினைத்தார் வடிவேலு. எனவே தீபாவிடம் சென்ற அவர் உங்கள் கண்களை மாறுகண் போல மாற்றி வைத்து நடியுங்கள். அது இன்னமும் கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கும் என கூறியுள்ளார். தீபாவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஆனால் அதன் பிறகுதான் பிரச்சனையே துவங்கியது. அந்த காட்சிக்கு பிறகு இயக்குனர்கள் பலரும் உண்மையிலேயே தீபாவிற்கு கண் அப்படிதான் என நினைத்து அவருக்கு வாய்ப்புகள் தாராமல் நிறுத்தினர். அதன் பிறகு அரசு, சாக்லேட் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் தீபா நடித்தார்.
இருந்தும் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்து வருகின்றன. மாயி படத்தில் நடித்த அந்த காட்சிதான் அதற்கு காரணம் என நம்பி வருகிறார் தீபா.






