Latest News
சித்தார்த்க்கு நடந்ததுதான் விஜய்க்கும்..! லியோவுக்கு காத்திருக்கும் பெரிய சவால்!
தமிழ் சினிமா உலகமே பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கும் படம் விஜய் நடித்துள்ள “லியோ”. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களும் 1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்து வரும் நிலையில் அந்த 1000 கோடி க்ளப்பில் தமிழ் படங்கள் இல்லையே என்ற ஏக்கம் பலருக்கும் உள்ளது.
அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் லியோ படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு லியோ படம் தமிழகத்தை தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற வேண்டியது அவசியம். இந்தியில் லோகேஷின் மாநகரம், கைதி படங்கள் ரீமேக்காகி நல்ல வரவேற்பை பெற்றதால் லியோவுக்கு அங்கு எதிர்பார்ப்பு உள்ளது. தெலுங்கு, மலையாளத்திலும் நடிகர் விஜய்க்கு பெரிய மார்க்கெட் உள்ளது.
ஆனால் கன்னடத்தில் விஜய்யின் லியோ வெளியாவதில் சிக்கல் எழலாம் என தெரிகிறது. அங்கு காவிரி நீர் தொடர்பான பிரச்சினை காரணமாக கன்னட மக்கள் – தமிழர்கள் இடையே சுமூகமான சூழல் இல்லாத நிலை உள்ளது. இன்று நடிகர் சித்தார்த் தனது ”சித்தா” படத்தின் ப்ரொமோஷன் நிமித்தம் கர்நாடகாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அப்போது உள்ளே புகுந்த கன்னட அமைப்பினர் செய்தியாளர் சந்திப்பு நடத்தக் கூடாது என்று பிரச்சினை செய்ததால் நடிகர் சித்தார்த் பாதியிலேயே வெளியேறினார். தொடர்ந்து காவிரி நீர் பிரச்சினை தொடர்வதால் தமிழ் படங்கள் கர்நாடகாவில் வெளியாவதில் எதிர்ப்புகளும், சிக்கல்களும் எழும் வாய்ப்பு உள்ளது. இது லியோ படத்தின் கன்னட வெளியீடு மற்றும் வசூலை வெகுவாக பாதிக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.