Cinema History
சில சர்ச்சைகளும் , கொலையும்,.. தமிழ் சினிமாவில் கிசு கிசு உருவான கதை!.. ஒரு விரிவான அலசல்!..
Gossips in Tamil cinema: கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் சங்கதிதான் கிசு கிசு. அப்போது துவங்கி இப்போதுவரை இருக்கும் கிசு கிசுவானது உருவானதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு.
கிசு கிசு:
முதலில் கிசு கிசு என்றால் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் தெரியாதவர்களுக்காக ஒரு விளக்கம். பிரபலங்களை பற்றி ஆதாரமற்ற சில ரகசியமான தகவல்கள் பேச்சு வழக்கிலோ சினிமாவில் உள்ள தொடர்புகள் மூலமாகவோ பத்திரிக்கையாளர்களை வந்தடையும். ஆனால் அவை சர்ச்சையை ஏற்படுத்தும் தகவல்களாக இருக்கும் பட்சத்தில் அதை வெளியிடுவதில் சிக்கல்களும் ஏற்படும்.
அதனால் கொலைகள் எல்லாம் வரலாற்றில் நடந்துள்ளன. எனவே அந்த பிரபலங்களின் பெயரை மக்களுக்கு புரியும் வகையில் இலை மறை காயாக குறிப்பிட்டு அந்த ரகசியத்தை எழுத துவங்கினர். இதைதான் கிசு கிசு என்று கூறுவார்கள். ஒற்றை விரல் நடிகர், வாரிசு நடிகர் என்றெல்லாம் குறிப்பிடும் முறை இப்படியாகதான் வந்தது.
இந்து நேசனும் லெட்சுமி காந்தனும்:
எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலக்கட்டத்திற்கு முன்பே கிசு கிசுவிற்கான புள்ளையார் சுழியை போட்டு வைத்தவர் லெட்சுமி காந்தன் எனும் பத்திரிக்கையாளர்தான். இவர் இந்து நேசன் பத்திரிக்கையில் 1943 இல் சினிமா தூது என்னும் வார இதழை துவங்கி அதில் பிரபலங்கள் குறித்த அந்தரங்க மற்றும் ரகசிய செய்திகளை எழுதி வந்தார்.
அப்படி அவர் எழுதும்போது அந்த பிரபலங்களின் பெயரையே குறிப்பிட்டு செய்திகளை எழுதி வந்தார். எனவே அது சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒவ்வொரு வாரமும் நம்மை பற்றி வந்துவிடுமோ என்று பிரபலங்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது.
மேலும் இதனால் மக்கள் மத்தியில் உள்ள நல்ல பெயரும் இவர்களுக்கு கெட்டு போனது. இப்படியாக என்.எஸ் கிருஷ்ணன் மற்றும் எம்.கே தியாகராஜ பாகவதர் குறித்து வந்த கட்டுரைகள் பெரும் சர்ச்சையை கிளப்பின.
மர்மகொலை:
இதனால் பாகவதருக்கும் என்.எஸ் கிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஆனது. இருவரும் பிரிய லெட்சுமிகாந்தன் எழுதிய ஒரு கட்டுரை காரணமாக இருந்தது. இதனை தொடர்ந்து சினிமாவில் இருந்து லெட்சுமிகாந்தனுக்கு மிரட்டல்கள் வர துவங்கின. இப்படி சினிமாவில் பலரிடமும் எதிர்ப்பை சம்பாதித்து வந்தார் லெட்சுமிகாந்தன். ஆனால் இந்த கட்டுரை எழுதுவதை மட்டும் அவர் விடவே இல்லை.
இந்த நிலையில் 6 நவம்பர் 1944 அன்று சென்னை வேப்பேரி பகுதியில் சென்று கொண்டிருந்தப்போது மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லெட்சுமிகாந்தன் சிகிச்சை பலனின்றி மறுநாள் இறந்து போனார்.
வரிசையாக கைதான பிரபலங்கள்:
இந்த நிலையில் இந்த குற்றம் நடந்து 50 நாட்கள் கழித்து அது தொடர்பாக முக்கிய குற்றவாளிகளாக நடிகர் எம்.கே தியாகராஜ பாகவதர், என்.எஸ் கிருஷ்ணன், பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த தயாரிப்பாளர் ஸ்ரீ ராமலு நாயுடு அவர்களோடு இன்னும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ராமலு நாயுடு நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.
ஆனால் எம்.கே தியாகராஜ பாகவதருக்கும், என்.எஸ் கிருஷ்ணனுக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர். ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட்டது. அடுத்தப்படியாக Judicial Committee of the Privy Council இல் அவர்கள் மேல் முறையீடு செய்தப்போது அவர்களை குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்தனர்.
அப்போதே இதில் பணம் விளையாடி இருக்கிறது என பேச்சுக்கள் இருந்தன. மேலும் அதற்கு பிறகும் இந்த வழக்கில் குற்றவாளி கண்டுப்பிடிக்கப்படவே இல்லை.
கிசு கிசுவின் பிறப்பு:
திரை பிரபலங்களின் இந்த செயல் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இனி எப்படி பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக எழுத முடியும் என்கிற கேள்வி அனைவரது முன்பும் இருந்தது. மேலும் இந்த நிகழ்வால் மற்ற பத்திரிக்கையாளர்களும் பிரபலங்கள் குறித்து எழுதுவதற்கே பயப்பட துவங்கினார்.
இது ஒரு பத்திரிக்கையாளரை அளவுக்கதிகமாக கோபப்படுத்தியது. அவர்தான் குமுதம் பத்திரிக்கையின் ஆசிரியரான எஸ்.ஏ.பி அண்ணாமலை. இப்படியே விட்டுவிட்டால் அது பத்திரிக்கையாளர்கள் கருத்து சுதந்திரத்திற்கே ஆபத்தாக முடிந்துவிடும் என நினைத்த எஸ்.ஏ.பி அண்ணாமலை ஆழ்ந்த யோசனைக்கு சென்றார்.
அந்தரங்க விஷயங்களை பத்திரிக்கைக்கும், அதை எழுதும் ஆசிரியருக்கும் பிரச்சனை இல்லாமல் எப்படி எழுதுவது என யோசித்தப்போதுதான் பிரபலங்களின் பெயர்களை நேரடியாக போடாமல் இலை மறை காயாக எழுத வேண்டும்.
ஆனால் அதன் மூலம் மக்கள் யார் அந்த பிரபலம் என்பதையும் அறிந்துகொள்ளும் வகையில் எழுத வேண்டும் என முடிவு செய்தார். கிசு கிசு உருவானது. கிசு கிசுவை பொறுத்தவரை அதை எழுதுபவர் நலன் கருதி பத்திரிக்கையில் அதை யார் எழுதினார் என்பதை குமுதம் பத்திரிக்கை வெளியிடாது.
சினிமாவில் ஒரு ஸ்லீப்பர்செல்ஸ்:
இந்த நிலையில் தரமான அந்தரங்க செய்திகளை எழுத ஒரு ஆள் வேண்டும் என குமுதம் பத்திரிக்கை தேடி கொண்டிருந்தப்போது அவர்களுக்கு கிடைத்த நபர்தான் எம்.பி மணி. இவர் சினிமாவில் அனைத்து பிரபலங்களுடன் நல்ல நெருக்கத்தில் உள்ளவர். பல பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் இவருக்கு தெரியும்.
மேலும் சினிமாவிற்கு செல்வதற்கு முன்பு மாலை முரசு, அலை ஓசை போன்ற பத்திரிக்கைகளில் பத்திரிக்கையாளராக பணிப்புரிந்திருந்தார் எம்.பி மணி. எனவே இதுக்குறித்து அவரிடம் பேசினார் அண்ணாமலை. உங்களது பெயர் எந்த சூழ்நிலையிலும் வெளிவராது என ஆசிரியர் கூறியதால் இதற்கு ஒப்புக்கொண்டார் எம்.பி மணி.
சினிமா பிரபலங்களுக்கு மீண்டும் திக் திக் வாரங்கள்:
இதனை அடுத்து குமுதத்தில் இந்து நேசன் பத்திரிக்கை போலவே வாரா வாரம் நடிகர்கள் குறித்த ரகசிய மற்றும் அந்தரங்க செய்திகள் கிசு கிசுவாக மக்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் வந்தன. இதனால் கையறு நிலையில் இருந்தனர் பிரபலங்கள். ஏனெனில் அவர்கள் பெயரை நேரடியாக குறிப்பிடாத காரணத்தால் அவர்களால் கேள்வி கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் சினிமாவிலேயே பலருக்கும் தெரியாத விஷயங்கள் கூட இந்த செய்திகளில் வந்தன.
சிக்கலில் சிக்கிய ஏ.வி.எம் ராஜன்:
இப்படியாக சினிமாவில் கூட பலருக்கும் தெரியாத ஏ.வி.எம் ராஜனின் காதல் கதை குமுதத்தில் வந்தப்போது ஏ.வி.எம் ராஜனோடு சேர்ந்து சினிமா துறையே அதிர்ச்சிக்கு உள்ளானது. அப்போது நடிகர் ஏ.வி.எம் ராஜனும் புஸ்பலதாவும் காதலித்து வந்தனர்.
ஏ.வி.எம் ராஜனோடும் நண்பராக இருந்து வந்தார் எம்.பி மணி. ஏ.வி.எம் ராஜனும் புஸ்பலதாவும் மிகவும் ரகசியமாகவே சந்தித்து வந்தனர். அந்த சமயத்தில் எல்லாம் அவர்கள் இருவரையும் யாரும் பார்த்துவிட கூடாது என்பதற்காக எம்.பி மணியிடம்தான் யாராவது வந்தால் சொல்லவும் என காவலுக்கு நிற்க வைப்பாராம்.
பாவம் எம்.பி மணிதான் அந்த கிசு கிசு எழுதுபவர் என்பது ஏ,வி.எம் ராஜனுக்கு தெரியாத சங்கதியாகும். இந்த நிலையில் மறு வாரமே அதை கிசு கிசுவாக எழுதினார் எம்.பி மணி.
சிவாஜியிடம் சென்ற பஞ்சாயத்து
இந்த நிலையில் இந்த பிரச்சனை நடிகர் சிவாஜி கணேசனிடம் சென்றது. அப்போது அவர்தான் நடிகர் சங்க தலைவராக இருந்தார். விஷயத்தை விசாரித்த சிவாஜி கணேசன் அந்த கிசு கிசு மன்னன் யார் என அறிந்து வருமாறு எம்.பி மணியிடமே கூறினார்.
எம்.பி மணி சிவாஜி கணேசனுடன் நெருக்கமான நட்பில் இருந்தார். அதனால் சிவாஜி கணேசனுக்கு எம்.பி மணி மீது எந்த ஒரு சந்தேகமும் வரவில்லை. இதற்கு நடுவே பிரபலங்கள் பலரும் யார் அந்த கிசுகிசுவை எழுதுவது என கேட்டு ஆசிரியர் ஏ.எஸ்.பி அண்ணாமலைக்கும் தொல்லை கொடுத்தனர். ஆனால் அவர் இறுதிவரை அதை ரகசியமாகவே வைத்திருந்தார்.
சிக்கிய எம்.பி மணி
இதற்கு நடுவே ஒரு மாத காலம் ஆகியும் கூட எம்.பி மணி எந்த ஒரு தகவலையும் சிவாஜி கணேசனுக்கு அளிக்காமல் இருந்துள்ளார். பிறகு ஒரு வாரத்தில் வெளியான கிசு கிசுவை படித்தப்போது சிவாஜி கணேசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த செய்தி சினிமாவில் யாருக்குமே தெரியாது. அது சிவாஜி கணேசனுக்கும் எம்.பி மணிக்கும் மட்டுமே தெரிந்த தகவல்.
எனவே இந்த கிசுகிசுவிற்கும் எம்.பி மணிக்கும் தொடர்புண்டு என்பதை அறிந்த சிவாஜி கணேசன். அவரை அழைத்து விசாரித்தார். அவரிடம் இருந்த நட்பின் காரணமாக உடனே உண்மையை ஒப்புக்கொண்டார் எம்.பி மணி. சிவாஜி கணேசனும் அதை வெளிப்படையாக யாரிடமும் கூறவில்லை. ஆனால் இனி கிசு கிசு எழுதக்கூடாது என எம்.பி மணியிடம் கூறிவிட்டார். அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார்.
ஆனால் அதோடு கிசு கிசு முடிந்துவிடவில்லை. பிறகு அனைத்து பத்திரிக்கைகளும் கிசு கிசுவை எழுத துவங்கின. அதற்காக சினிமாவில் பல்வேறு நபர்களிடமும் தகவல்களை பெற்றனர். அதன் பிறகு கிசுகிசு என்பது திரைத்துறையால் கூட கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலையை எட்டியது…
Editor
Rajkumar K