லேட்டா வந்த ரகுவரன்.. கடுப்பாகி ஸ்க்ரிப்டை கிழித்து போட்ட கே.எஸ்.ரவிக்குமார்! – அப்புறம்தான் சம்பவமே!
தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் ரகுவரன். வில்லனாக நடிப்பதற்கான அஜானுபாகுவான தோற்றம், முரட்டுத்தனமான குரல் என எதுவும் இல்லாமல் ஒல்லியான தேகத்துடன், ஹஸ்க்கி வாய்ஸில் பேசினாலும் வில்லத்தனத்தை தனது ஆக்டிங்கில் கொண்டு வந்து பட்டையை கிளப்பி விடுவார் ரகுவரன்.
1990ம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘புரியாத புதிர்’. ரகுமான், ரேகா, சித்தாரா, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் ரகுவரனுக்கு ஒரு சேடிஸ்ட் கணவன் கதாப்பாத்திரம். இந்த படத்தில் ஒரு காட்சியில் ரேகா பேச பேச ரகுவரன் தொடர்ந்து ‘ஐ நோ.. ஐ நோ’ என சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த காட்சி ரொம்ப பிரபலம்.
அந்த காட்சி உருவான கதை குறித்து சமீபத்தில் கே.எஸ்.ரவிக்குமார் பேசியுள்ளார். அன்றைக்கு 8 மணிக்கே ஷூட்டிங். ஆனால் ரகுவரன் 11 மணி போல தாமதமாக வந்துள்ளார். இதனால் கடுப்பான கே.எஸ்.ரவிக்குமார் அன்று ரகுவரன் பேச வேண்டிய 10 பக்க வசனங்களை கோபத்தில் கிழித்து போட்டுவிட்டார்.
பின்னர் ரகுவரன் வந்து அவரை சமாதானப்படுத்தியதும் எப்படி அதை காட்சிப்படுத்தலாம் என யோசித்த கே.எஸ்.ரவிக்குமார் “ரேகா டயலாக் பேச பேச நீ ‘ஐ நோ.. ஐ நோ’ ன்னு மட்டும் சொல்லு. ஆனா ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாடுலேசன்ல சொல்லு” என கூறியுள்ளார்.
அதை ஒரு சவாலாக ஏற்று அந்த ‘ஐ நோ’ காட்சியை செய்துள்ளார் ரகுவரன். அந்த சீனில் சுமார் 65 தடவை ஐ நோ சொல்வாராம் ரகுவரன். அந்த காட்சி தியேட்டரில் ஓடியபோது ரகுவரனின் ஆக்டிங்கை கண்டு பலரும் மிரண்டு விட்டார்களாம். ரகுவரன் ஹூட்டிங்கிற்கு தாமதமாக வந்த காரணத்தால் இப்படி ஒரு புகழ்பெற்ற சீன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கிறது.