Cinema History
என்னை படத்தைவிட்டா தூக்குற !.. என்ன செய்யுறேன் பாரு!.. பானுமதியை பார்த்து எம்.ஜி.ஆரே பயப்பட இதுதான் காரணம்!..
திரைத்துறையில் எம்.ஜி.ஆர் எவ்வளவு பெரிய ஆளுமை என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர் சிவாஜிக்குதான் தமிழ் சினிமாவில் பெரும் மார்க்கெட் இருந்தது. அப்படி இருந்தும் கூட அவர்களுக்கு இணையான ஒரு மார்க்கெட்டை பெற்ற நடிகையாக பானுமதி இருந்தார்.
இதனாலேயே இவர்கள் இருவருமே பானுமதி திரைப்படங்களில் நடிப்பதற்கு யோசனையாக இருந்தனர். மேலும் நடிப்பிலும் கூட இவர் சிவாஜிக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர், சிவாஜி கணேசனே ஒருமுறை பானுமதி குறித்து கூறும்போது பானுமதியுடன் நடிக்கும்போது உஷாராக நடிக்க வேண்டும்.
இல்லை என்றால் நம்மை விட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவிடுவார் என்கிறார் சிவாஜி. அதற்கு தகுந்தாற் போல மிஸ்ஸியம்மா திரைப்படத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மிஸ்ஸியம்மா திரைப்படத்தில் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஆனால் அதற்கு முன்பே அதில் நடிக்க இருந்தவர் நடிகை பானுமதி. ஆனால் படத்தின் திரைக்கதை ஆசிரியரான சக்ரபாணிக்கும் பானுமதிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை அந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டனர்.
இதனால் கடுப்பான பானுமதி தெலுங்கில் சக்ரபாணி என்னும் பெயரிலேயே ஒரு திரைப்படத்தை தயாரித்தார், அந்த திரைப்படத்தில் சக்ரபாணி என்னும் கதாபாத்திரம் மனநலம் சரியில்லாத கதாபாத்திரமாக இருக்கும். சக்ரபாணியை பழி வாங்குவதற்காகவே அதை செய்தார் பானுமதி.
அவ்வளவு கோபக்காரராக அவர் இருந்ததால்தான் அவருடன் நடிக்க பெரிய நடிகர்களே யோசனையாக இருந்தனர்.