Manjummel Boys: மலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
கதைப்படி கொச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு 10 நண்பர்கள் சுற்றுலா செல்கின்றனர். அப்படி சென்று குணா குகையை பார்க்கும்போது அங்கு ஒரு 900 அடி ஆழமுள்ள குழியில் சிக்கி கொள்கிறார் அவர்கள் நண்பர்களில் ஒருவர். இந்த நிலையில் மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து அந்த நபரை காப்பாற்றுவதே கதையாக இருக்கிறது.
படத்தின் தயாரிப்பு சிறப்பாக இருந்ததால் படம் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்தே நல்ல வரவேற்பை பெற்றது மஞ்சுமல் பாய்ஸ். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனரான சிதம்பரத்திற்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது.
தமிழ் பிரபலங்கள் பலரும் அவரது திரைப்படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் இயக்குனர் சிதம்பரம். அதில் அவர் கூறும்போது க்ளைமேக்ஸ் காட்சியில் குறியீடாக சில காட்சிகளை நான் வைத்திருந்தேன்.
கதைப்படி அந்த நபர் மாட்டிக்கொள்ளும் குழியை ஒரு கர்ப்பப்பை போலவே வடிவமைத்திருப்பேன். அதாவது பூமி தாயின் கர்ப்பப்பைக்குள் அந்த நபர் மாட்டிக்கொண்டார் என்பதாகவே காட்சியை அமைத்திருந்தேன். அதனால்தான் அதற்குள் அவர் ஆடையில்லாமல் இருப்பார். இந்த நிலையில் குழந்தைக்கு இருக்கும் ஒரு தொப்புள் குடியை போலதான் அவரை காப்பாற்றும் அந்த கயிறு இருக்கும்.
எப்படி ஒரு குழந்தை பிறக்கும்போது அழுதுக்கொண்டே இரத்தத்துடன் வயிற்றில் இருந்து வருமோ அதே போல அவரும் அழுதுக்கொண்டுதான் வருவார். அது அவருக்கு மறுப்பிறப்பு என விளக்கியுள்ளார் இயக்குனர் சிதம்பரம்.