Cinema History
எம்.ஜி.ஆர்னா பெரிய ஆளா!.. யார் சொன்னாலும் நான் எழுதுனதுதான் பாட்டு!.. புரட்சி தலைவரை கடுப்பேற்றிய கவிஞர்!.
Tamil Actor MGR : தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஜி.ஆர் எப்பேற்பட்ட ஆளுமை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்த விஷயமே. மதுர படத்தில் வரும் விஜய் கூறுவது போல அவர் கூறுவதுதான் கட்டளை அதற்கு மறுப்பேச்சே கிடையாது.
திரைத்துறையில் இருந்தப்போதே எம்.ஜி.ஆருடன் அமர்ந்து பேசவே அவரவர் பயப்படுவார்கள் என்று சந்திரபாபு ஒருமுறை கூறியிருந்தார். அதே போல எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்களில் அதில் நடிக்கும் நடிகர்கள் முதல் பாடல்கள் வரை அனைத்துமே எம்.ஜி.ஆர் விருப்பத்திற்கு இருக்க வேண்டும்.
இல்லை என்றால் அந்த படம் வெளிவருவதே சிக்கல்தான். அதனால்தான் எம்.ஜி.ஆரை வைத்து சந்திரபாபு இயக்கிய ஒரு திரைப்படம் கடைசி வரை வெளிவரவே இல்லை. 1955 ஆம் ஆண்டு வெளியான மங்கையர் திலகம் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு பாடலாசிரியராக அறிமுகமானவர் பாடலாசிரியர் மருதகாசி.

எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களுக்கு மருதகாசி பாடல் வரிகளை எழுதி தந்துள்ளார். அலிபாபாவும் 40 திருடர்களும், மன்னாதி மன்னன், தாய்க்கு பின் தாரம் என சில படங்களுக்கு அவர் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஆனால் மருதகாசியை பொறுத்தவரை ஒரு பாடல் வரியை மாற்ற வேண்டும் என்றால் அதற்கான காரணம் நியாயமாக இருக்க வேண்டும். கதாநாயகனுக்காகவெல்லாம் அவர் பாடல் வரிகளை மாற்ற மாட்டார்.
இந்த நிலையில்தான் தாய்க்கு பின் தாரம் திரைப்படத்தில் பாடல் வரிகளை எழுதும்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அந்த படத்தில் ஒரு பாடல் வரியில் மனுசனை மனுசன் சாப்பிடுகிறாண்டா தம்பி பயலே என பாடல் வரிகள் இருந்தது. பயலே என எழுதியிருப்பது மரியாதை குறைவாக தெரிகிறதே. அன்பு தம்பி என எழுதலாமே என கூறியிருக்கிறார் எம்.ஜி.ஆர்

அதற்கு பதிலளித்த மருதகாசி கிராமபுரங்களில் பயலே என்னும் வார்த்தை பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. அது மரியாதை குறைவான வார்த்தை இல்லை என கூறிவிட்டார். இருந்தாலும் எம்.ஜி.ஆர் மாற்ற வேண்டும் என கூறிவிட்டார். ஆனால் மருதகாசி ஒப்புக்கொள்ளவே இல்லை. பிறகு எம்.ஜி.ஆரின் அண்ணன் இருவரையும் சமாதானப்படுத்தியதை அடுத்து அந்த பாடல் வரிகள் அப்படியே படத்தில் இடம் பெற்றன.
ஆனால் அதற்கு பிறகு எம்.ஜி.ஆர் அவரது திரைப்படங்களில் மருதகாசிக்கு வாய்ப்பளிப்பதை நிறுத்திக்கொண்டார். ஆனால் எம்.ஜி.ஆரே கூறியும் அதை ஒப்புக்கொள்ளாத இரண்டாவது கவிஞராக தமிழ் சினிமாவில் மருதகாசி இருந்துள்ளார். முதல் கவிஞர் வேறு யாரும் இல்லை நம் கண்ணதாசன் தான்.
