Cinema History
எங்கப்பா நினைச்சிருந்தா 15 வருஷத்துக்கு அவர்தான் கவிஞர்!.. வேற யாருக்கும் அப்படி நடக்கலை!. கண்ணதாசன் மகனின் ஓப்பன் டாக்!..
Poet Kannadasan: கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் கவிஞர்களுக்கு என்று தனி மதிப்பும் மரியாதையும் தமிழ் சினிமாவில் இருந்தது. எப்படி இசையமைப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் அதிக சம்பளம் தருகிறார்களோ அதே போலவே அதிக சம்பளம் பெற்றவர்களாகத்தான் கவிஞர்களும் இருந்தனர்.
ஏனெனில் இசைக்கு தகுந்த பாடல் வரிகளை எழுதுவது என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒரு விஷயம் கிடையாது. அதுவும் அந்த வரிகள் எல்லாம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். தற்சமயம் பாடல் வரிகளை நடிகர்கள் கூட எழுதுகின்றனர்.
ஆனால் அந்த வரிகள் எல்லாம் அர்த்தமுள்ளதாக இருக்கிறதா என்பது கேள்விதான். இதனால்தான் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் மிகப் பெரும் கவிஞராக கண்ணதாசன் அறியப்பட்டார். கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்ததை அடுத்து அவருடைய கால் சீட் கிடைப்பது என்பது இயக்குனர்களுக்கு கடினமான விஷயமாக மாறியது.
இது குறித்து கண்ணதாசனின் மகன் ஒரு பேட்டியில் கூறும் பொழுது எங்கள் ஏரியாவில் யார் வீட்டிலுமே கார் கிடையாது. ஆனாலும் ஏரியாவில் குறைந்தது எப்போதும் 30 காராவது நின்று கொண்டிருக்கும். அவையெல்லாம் ஒவ்வொரு திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அனுப்பிய கார் ஆகும்.
வெளியில் வரும் எனது தந்தை எந்த காரில் ஏறுகிறாரோ அந்த படத்திற்கு தான் அவர் முதலில் பாடல் வரிகள் எழுதப் போகிறார் என்று அர்த்தம். கண்ணதாசன் நினைத்திருந்தால் அடுத்த 15 வருடத்திற்கு தமிழ் சினிமாவில் வேறு எந்த கவிஞரும் வளர முடியாதபடி செய்திருக்க முடியும். அந்த அளவிற்கு அவருக்கு மதிப்பு இருந்தது. தமிழ் சினிமாவிலேயே ஒரு கவிஞருக்கு இப்படி வண்டி அனுப்பி காத்திருந்த கதை கண்ணதாசனுக்கு மட்டுமே உண்டு என்று கூறுகிறார் அவர் மகன்.